தேமுதிக அதிருப்தி எம்.எல்.எக்களை நீக்காதது ஏன் ? - ஜெயலலிதா கேள்வி

Posted by Unknown on 10:30 AM with No comments
சட்டமன்றத்தில் தே.மு.தி.க உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கு இடையே வியாழக்கிழமை காரசார விவாதம் நடைபெற்றது.

அப்போது, தே.மு.தி.கவில் இருந்து பிரிந்த எம்.எல்.ஏ.க்களை கட்சியிலிருந்து நீக்கியிருக்க வேண்டாமா? என்று முதல்வர் ஜெயலலிதா கேள்வி எழுப்பினார்.

சட்டமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நீதி நிர்வாகம், சிறைச்சாலை துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் தே.மு.தி.க உறுப்பினர் முத்துக்குமார் பேசும்போது, சிறைச்சாலைகளில் போதுமான அளவு துப்புரவுப் பணியாளர்கள் இல்லை என்றார். அப்போது அமைச்சர் பா.வளர்மதி குறுக்கிட்டுப் பேசியது:

சிறைச்சாலையைப் பற்றி தே.மு.தி.க உறுப்பினர் பேசுகிறார். அவர் சிறைக்குச் சென்று பார்த்தாரா? அல்லது, வேறு தே.மு.தி.க உறுப்பினர்கள் சிறைக்குச் சென்று பார்த்தார்களா? என்று கேட்டார். அதற்கு தே.மு.தி.க உறுப்பினர்கள் எழுந்து எதிர்ப்புத் தெரிவித்தனர்.

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் அழகாபுரம் மோகன்ராஜ், தே.மு.தி.க கொறடா சந்திரகுமார் ஆகியோர் அமைச்சர் கூறியதற்கு பதிலளிக்க வாய்ப்பு வேண்டும் என்று கேட்டனர். அதற்கு பேரவைத் தலைவர் தனபால் அனுமதி தரவில்லை.

தே.மு.தி.க உறுப்பினர்தான் பேசிக் கொண்டிருக்கிறார். அவர் பதில் அளிக்கட்டும் என்று தனபால் கூறினார்.

முத்துக்குமார்: தே.மு.தி.க உறுப்பினர்கள் யாரும் சிறை சென்றவர்கள் இல்லை. ஆனால், அவையில் ஊழல் செய்தவர்கள் இருக்கின்றனர்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி: தே.மு.தி.கவினர் செய்த குற்றங்களைத்தான் முதல்வர் நேற்று (ஆகஸ்ட் 6) பட்டியலிட்டுக் காட்டினார். அதன் மூலம் தே.மு.தி.கவினரின் யோக்கியதை தெரிந்தது. முதல்வர் சொல்லாவிட்டால், எங்களுக்கே அது தெரிந்திருக்காது.

முதல்வர் ஜெயலலிதா: அதிமுக உறுப்பினர்கள் தவறு செய்தால், அவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நீக்கம் செய்யப்படுகின்றனர். தே.மு.தி.கவில் அப்படியா இருக்கிறது என்றார்.

இதற்கு தே.மு.தி.கவினர் எதிர்ப்புத் தெரிவித்துக் குரல் கொடுத்தனர்.

அமைச்சர் வைத்திலிங்கம்:தே.மு.தி.கவில் உள்ள உறுப்பினர்கள் எல்லாம் வெவ்வேறு கட்சியில் இருந்து வந்தவர்கள். அசல் தே.மு.தி.கவினர் என்று யாரும் இல்லை.

முத்துக்குமார்: தே.மு.தி.கவிலும் தவறு செய்பவர்களை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே கேப்டன் நீக்கம் செய்கிறார்.

அமைச்சர் வைத்திலிங்கம்: கேப்டன்கேப்டன் என்று சொல்கிறீர்களேஅவர் ராணுவத்தில் கேப்டனாக இருந்தாரா?

இதற்கு தே.மு.தி.கவினர் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், பேசுவதற்கு அனுமதி கேட்டனர். பேரவைத் தலைவர் தரவில்லை.

இதற்கிடையே, தே.மு.தி.கவில் இருந்து பிரிந்து செயல்படும் உறுப்பினர் சாந்தி பேசுவதற்கு அனுமதி கேட்டார். தனபால் தர முற்பட்டார்.

இதனால், தே.மு.தி.க உறுப்பினர்கள் ஆவேசத்துடன் எதிர்ப்புக் குரல் கொடுத்தனர்.

அவை முன்னர் ஓ.பன்னீர்செல்வம்: தே.மு.தி.க உறுப்பினர்கள் எல்லோரும் எழுந்து அனுமதி கேட்கக்கூடாது. ஒவ்வொருவராக எழுந்து அனுமதி கேட்க வேண்டும். பேரவைக்கு என்று சில மரபுகள் இருக்கின்றன. அதனை தே.மு.தி.க உறுப்பினர்கள் பின்பற்ற வேண்டும் என்றார்.

ஆனால், தே.மு.தி.க உறுப்பினர்கள் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

முதல்வர் ஜெயலலிதா: உறுப்பினர் சாந்தி இப்போதும் தே.மு.தி.கவில்தான் இருக்கிறார். அவரை ஓடுகாலி, துரோகி என்று தே.மு.தி.க உறுப்பினர்கள் கூறுகின்றனர். அப்படியிருந்தால் அவர் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுத்து, தே.மு.தி.கவில் இருந்து நீக்க வேண்டும் என்றார்.

அப்போது பேசுவதற்கு அனுமதி கேட்டு, தே.மு.தி.கவினர் குரல் கொடுத்தனர். ஆனால், பேரவைத் தலைவர் அனுமதி தரவில்லை.

ஓ.பன்னீர்செல்வம்: தே.மு.தி.கவினர் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். பேரவையில் பேசுவதற்கு ஒவ்வொருவராக அனுமதி கேட்கலாம். அனுமதி தருவதற்கும், மறுப்பதற்கும் பேரவைத் தலைவருக்கு உரிமை உண்டு.

தே.மு.தி.கவினரின் தொந்தரவு தாங்க முடியாமல், கட்சியிலிருந்தே பண்ருட்டி ராமச்சந்திரன் விலகினார் என்றார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தே.மு.தி.கவினர் சிறிது நேரம் குரல் கொடுத்தனர். பிறகு அமைதியாகி விட்டனர்.