புதுக்கோட்டை, தஞ்சை பகுதிகளில் 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மைல்கற்கள் கண்டெடுப்பு

Posted by Unknown on 9:56 AM with No comments
புதுக்கோட்டை, தஞ்சை பகுதிகளில் 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மைல்கற்கள் கண்டெடுப்பு

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல், தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி, மாப்பிள்ளைநாயக்கர்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ், அரபு, ரோமனிய மொழி எண்கள் பொறிக்கப்பட்ட மைல்கற்கள் திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அரசு மாணவர் விடுதிக்கு நேர் எதிரே தமிழ், ரோமனிய எண்கள் பொறிக்கப்பட்ட மைல்கல், சாலை ஓரத்தில் நடப்பட்ட நிலையில் உள்ளது. மேலும் 2 மைல்கற்கள் தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி, மாப்பிள்ளைநாயக்கர்பட்டி ஆகிய சாலைகளின் ஓரத்தில் உள்ளன.

இதுகுறித்து மாவட்ட அறிவியல் இயக்கத் தலைவர் மணிகண்டன் கூறியது:

தமிழ் எண்கள் பயன்பாடு சார்ந்த ஆய்வுகள் மேற்கொள்ளும் எண்ணத்தோடு பல்வேறு கிராமங்களில் இதுகுறித்து தகவல் சேகரித்து வருகிறோம்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை எல்லைப் பகுதியான மாப்பிள்ளைநாயக்கர்பட்டி, செங்கிப்பட்டி ஆகிய பகுதிகளில் தமிழ், அரபு எண்கள் பொறிக்கப்பட்ட மைல்கற்களை அடையாளம் கண்டுள்ளோம். இந்த மைல்கற்கள் 18-ஆம் நூற்றாண்டில் சாலை அளவீட்டு முறை நடைமுறைப்படுத்திய பிறகு நடப்பட்டன என்பதும், ஆங்கிலேயர்களின் ஆளுகையின்போது வெளியிடப்பட்ட அரசாங்க ஆவணங்கள், நில வரைபடங்கள் மூலமாக தெளிவாகின்றன.

தஞ்சாவூர் அரண்மனை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள மைல்கற்களோடு தற்போது அடையாளம் காணப்பட்ட மைல்கற்களை ஒப்புநோக்கும்போது இவையனைத்தும் ஒரே காலத்திலானவை என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.


கண்டெடுக்கப்பட்டுள்ள மைல்கற்களை தமிழ்நாடு தொல்லியல் துறை அருங்காட்சியங்களில் ஒப்படைக்க தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமிழ்நாடு தொல்லியல் கழகம் ஆகியவை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றார்.
Categories: