சச்சினும் நேதாஜியும் சரி சமமானவர்களா பாரத ரத்னாவிருதுவின் பாரபட்சம்

Posted by Unknown on 5:30 AM with No comments
சச்சின் டெண்டுல்கர், எம்.ஜி.ஆர் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருது நேதாஜிக்கு வழங்குவது சரியா  என்கிற வினா இப்போது பலரிடமும் எழுந்துள்ளது.

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான 'பாரத ரத்னா' விருது அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டுள்ள பாரத ரத்னா விருது சுதந்திர போராட்ட நாயகன் நேதாஜி சுபாஸ் சந்திரபோசுக்கு,  வழங்கப்படவுள்ளதாக தெரிகிறது. இதுதான் இப்போது சர்சையை கிளப்பியுள்ளது.

மத்தியில், நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ., அரசு பதவியேற்றுள்ள நிலையில், இந்தாண்டு, ஐந்து பேருக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.முன்னாள் பிரதமரும், பா.ஜ., மூத்த தலைவருமான வாஜ்பாய், சுதந்திர போராட்ட தலைவர், நேதாஜி சுபாஸ் சந்திர போஸ், சுதந்திர போராட்ட முக்கிய தலைவர்களில் ஒருவரான மதன்மோகன் மாளவியா, பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர், கன்ஷிராம் ஆகியோருக்கு, விருது வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியானது.

பாரதரத்னா விருது வழங்கப்பட்டுள்ளோர் பட்டியல்

பாரத ரத்னா விருது வாங்கும் சச்சின்
பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த சிறந்த குடிமக்களுக்கு, நாட்டின் மிக உயரிய விருதான, பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. நாட்டின் முதல் பிரதமர் நேரு, ராஜாஜி, காமராஜர், எம்.ஜி.ஆர்., அப்துல் கலாம் உள்ளிட்ட  43 பேருக்கு இதுவரை பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம், கிரிக்கெட் வீரர் சச்சின், விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

'பாரத ரத்னா' என்ற வார்த்தைக்கு, 'இந்தியாவின் ரத்தினம்' என்பது அர்த்தம்.கலை, அறிவியல், இலக்கியம், சமூக சேவை ஆகிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. கடந்த 2011ல், விதிகள் திருத்தப்பட்டு, 'பிற துறைகளில் சேவை செய்வோருக்கும் இந்த விருது வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டது. மரணம் அடைந்தவர்களுக்கு இந்த விருதை வழங்குவது இல்லை என்ற நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது. பின், 1955ல், இந்த நடைமுறை மாற்றப்பட்டது.

இந்த விருது, இந்தியர்களுக்கானது என்றாலும், பாகிஸ்தானை சேர்ந்த, கான் அப்துல் கபார் கான், தென்ஆப்ரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா ஆகியோருக்கும் வழங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் பிறந்தாலும், தன் வாழ்நாள் முழுவதும் இந்திய மக்களுக்கு சேவை செய்த, அன்னை தெரசாவுக்கும், பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இந்த விருது வாழும்போதே முன்னால் முதல்வர் எம்.ஜி.ஆருக்கும் வழங்கப்பட்டது. ஆனால் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் தந்தையும் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சருமான டாக்டர் அம்பேத்கர் 1956ம் ஆண்டு இறந்தார். அவர் இறந்து 30 வருடம் கழித்து அதாவது 1990ம் ஆண்டு அம்பேத்கருக்கே பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இந்நிலையில்தான் சுபாஸ் சந்திரபோஸ் மரணத்தின் மர்மமே  முடிவுக்கு வராத நிலையில் அடுத்த சர்ச்சை கிளம்பியுள்ளது.

சுபாஸ் சந்திரபோஸ், இந்திய சுதந்திர போராட்டத்துக்காக பாடுபட்ட தலைவர்களில் முக்கியமானவர். நாட்டு மக்களால், அன்புடன், 'நேதாஜி' என, அழைக்கப்படுகிறார். நாட்டின் விடுதலைக்காக, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தார்.

கடந்த 1941ல், பிரிட்டிஷ் அரசால், வீட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த சுபாஸ் சந்திர போஸ், அங்கிருந்து தப்பினார். இந்திய சுதந்திர போராட்டத்துக்கு ஆதரவு திரட்டுவதற்காக, வெளிநாடுகளுக்கு சென்றார்.கடந்த 1945ல், தைவானில் நிகழ்ந்த விமான விபத்தில், அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தைவான் அரசு, அப்படி ஒரு விமான விபத்தே நடக்கவில்லை என, அறிவித்தது. நேதாஜியின் ஆதரவாளர்களும், அவர் மரணம் அடையவில்லை என, கூறினர்.

இதையடுத்து, நேதாஜியின் மரணம் குறித்து விசாரிக்க, 1956, 1970, 1999 ஆகிய ஆண்டுகளில், கமிஷன் அமைக்கப்பட்டது. 1956ல் அமைக்கப்பட்ட கமிஷனில், மூன்று பேர் இடம் பெற்றிருந்தனர். நேதாஜியின் மரணம் குறித்து முடிவு செய்வதில், இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.கடந்த 1970ல், அமைக்கப்பட்ட குழு, நேதாஜி மரணத்தை உறுதி செய்தது. ஆனால், 1999ல், அமைக்கப்பட்ட முகர்ஜி குழு, 'நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை; ரஷ்யாவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம்' என, கூறியது. ஆனாலும், அவரின் மரணம் தொடர்பாக, இன்னும் மர்மம் நீடிக்கிறது. இந்நிலையில் தான் நேதாஜி உள்ளிட்ட ஐந்துபேருக்கு  பாரத ரத்னா விருது வழங்குதற்கான வேலைகள் துவங்கியுள்ளதாக தெரிகிறது.
அதனால் பாரத ரத்னா பதக்கங்கள் தயாரிக்கும், ரிசர்வ் வங்கியின் நாணய துறையினரிடம், ஐந்து பதக்கங்கள் தயாரிக்கும் படி, மத்திய அரசு தெரிவித்து உள்ளதாக கூறப்பட்டது. விருது பெறுவோருக்கான பட்டியல் குறித்து, சுதந்திர தினத்துக்கு முந்தைய நாள் அறிவிப்பு வெளியாகும் என்றும் பேசப்பட்டது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. நேதாஜியின் குடும்பத்தினர், இந்த விருதை ஏற்க போவது இல்லை என, தெரிவித்துள்ளனர்.

நேதாஜியை மற்றவர்களுடன்  சிறுமைபடுத்தாதீர்

சந்திரகுமார் போஸ்
நேதாஜி குடும்பத்தை சேர்ந்த, சந்திரகுமார் போஸ், கோல்கட்டாவில் நேற்று கூறியதாவது:

கடந்த 1992லும், நேதாஜிக்கு பாரத ரத்னா விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவித்தது. அதை, எங்கள் குடும்பத்தினர் ஏற்க மறுத்து விட்டனர். இப்போதும், இதுகுறித்த தகவல் வெளியாகியுள்ளது. எங்கள் குடும்பத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள், விருதை ஏற்க வேண்டாம் என, முடிவெடுத்துள்ளனர்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், தனது வீட்டை துறந்து, நாட்டை துறந்து, வெளிநாடுகளுக்கு சென்று தாய்நாட்டின் விடுதலைக்காக பல்வேறு நாடுகளின் தலைவர்களின் ஆதரவுடன் இந்தியாவுக்கு வெளியே ராணுவம் ஒன்றை உருவாக்கி, இந்தியாவின் சுதந்திரத்துக்காக போராடியவர். அவரை மற்றவர்களோடு ஒப்பிடாதீர்கள். அவர் பதக்கங்களுக்காகவோ, பாரத ரத்னா விருதுக்காகவோ தனது போராட்டத்தை நடத்தியவர் அல்ல. விடுதலை போராளிகள் தங்களது உயிரை இந்த நாட்டுக்காக தான் தியாகம் செய்தார்களே தவிர பதக்கங்களுக்காக அல்ல. எனவே, நேதாஜிக்கு பாரத ரத்னா வழங்கும் முடிவை மத்திய அரசு எடுக்காது என்று நான் கருதுகிறேன். ஆனால், அப்படியொரு நிலையை அரசு மேற்கொண்டால் அது நேதாஜியை அவமதிப்பதாகும். அவரை சிறுமைப்படுத்துவதாகும். நேதாஜியை அவர்கள் கண்ணியப்படுத்த வேண்டும் என்றால் அவரது மறைவு தொடர்பாக அரசிடம் உள்ள கோப்புகளை பகிரங்கமாக வெளியிட வேண்டும்.

அவர் எப்போது, எப்படி மரணம் அடைந்தார் என்பதை கூறும் கடமை, மத்திய அரசுக்கு உள்ளது. நேதாஜி மரணம் தொடர்பாக விசாரிப்பதற்கு, ஒரு குழுவை அமைக்க வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடிக்கு, எங்கள் குடும்பத்தை சேர்ந்த, 60 பேர் கையெழுத்திட்டு, கடிதம் எழுதியுள்ளோம். எங்கள் மறுப்பையும் மீறி விருது அறிவிக்கப்பட்டாலும், அதை வாங்கச் செல்ல மாட்டோம். பாரத ரத்னா விருதை விட, நேதாஜி உயர்ந்தவர் என்று  அவர் கூறினார்.

சச்சின் டெண்டுல்கர், எம்.ஜி.ஆர் உள்ளிட்டவர்களுக்கு கொடுக்கப்பட்ட பாரத ரத்னா விருது பட்டியலில் டாக்டர் அம்பேத்கரை சேர்த்தார்கள் மக்கள் அமைதியாக இருந்தார்கள். இப்போது நேதாஜியை சேர்க்கப்படுகிறார். இப்போதும் அமைதியாக இருக்கிறாரகள்.

நியாயமாரே நியாயமாரே