திருச்சி ஏர்போர்டில் டாக்டர் இல்லை. எபோலோ வைரஸ் எச்சரிக்கை

Posted by Unknown on 10:30 PM with No comments
எபோலா நோய் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் மருத்துவ பணியிடங்களும் காலியாக கிடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் தேனியை சேர்ந்த பார்த்திபனுக்கு தீவிர சோதனை மேற்கொண்டுள்ள இந்த இக்கட்டான நிலையிலும் திருச்சி விமான நிலையத்தில் எபோலா பரிசோதனகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை காரணம் மருத்துவர்கள் இல்லாத அவலம்தான் காரணம்.


ஆப்ரிக்க நாடுகளுக்கு திருச்சியிலிருந்து நேரடி விமானப்போக்கு வரத்து இல்லை என்றாலும் இலங்கை வழியாக ஆப்ரிக்காவிலிருந்து பயணிகள் திருச்சி வர வாய்ப்புள்ளது. கடந்தாண்டுவரை பிளேக், பறவைக்காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் நோய்களுக்கு திருச்சியில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது ஆனால் தற்போது சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் ஒரு சர்வதேச விமான நிலையத்துக்குண்டான மருத்துவ வசதிகள் இல்லை என்கிறார்கள்  பயணிகள்.


பன்றிக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல், பிளேக் என ஒவ்வொரு நேரமும் ஏதாவது ஒரு நோய் புதிது புதிதாக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகி வருகின்றது. வைரஸ் கிருமி மூலம் ஏற்பட்டு பரவி வரும் இந்நோய்கள் இந்தியாவில் பரவாத வகையில் மத்திய சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.

நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் மருத்துவக்குழுவினர், வெளிநாடுகளிலிருந்து நோய் தொற்றுடன் வரும் பயணிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு தீவிர சோதனை மேற்கொள்கின்றனர். நோய் உறுதி செய்யப்படும் நிலையில் தனி அறையில் வைத்து தீவிர சிகிச்சைக்கு பின் நோய் குணமான பின்னரே பயணி நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றார். இந்த அடிப்படையில்தான் கடந்த சில ஆண்டுகளாக உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த உயிர்கொல்லி நோய்கள் இந்தியாவிற்குள் வரவிடாமல் கட்டுப்படுத்தப்பட்டன.

அந்த வகையில் தற்போது பரவி வருவது எபோலா நோய். இந்நோயும் வழக்கமாகவே வைரஸ் கிருமியால்தான் ஏற்பட்டுள்ளாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆப்ரிக்க நாடுகளிலிருந்து இந்நோய் பரவியுள்ளது, குறிப்பாக கினியா, சைபீரியா, நைஜீரியா உள்ளிட்ட மத்திய ஆப்ரிக்க நாடுகளிலிருந்து இந்நோய் உலக நாடுகளுக்கு பயணிகள் மூலம் பரவி வருகின்றது. காய்ச்சல், தலைவலி, வாந்தி, மயக்கம் போன்றவை இந்நோயின் அறிகுறிகளாக கூறப்படுகின்றன. இதற்கு இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

உலக நாடுகள் அனைத்தும் ஆப்ரிக்காவிலிருந்து நாட்டுக்குள் வரும் பயணிகளை தீவிர பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கின்றன. இந்திய விமான நிலையங்களும் உஷார் படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் மேற்கொண்ட சோதனையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு கினியாவிலிருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் வந்த தேனியைச் சேர்ந்த பார்த்திபன் என்ற பயணிக்கு கடுமையான காய்ச்சல் இருந்ததையடுத்து அவர் தனியறையில் வைத்து தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

திருச்சி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்பட்ட பின்னரும் மருத்துவப் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. திருச்சி விமான நிலையத்துக்கு சுங்கத்துறை விமான நிலைய அந்தஸ்து காலத்திலேயே இரு மருத்துவ பணியிடங்கள் இருந்தன. அதில் டாக்டர் கருணாகரன் என்பவரும் உதவி மருத்துவராக டாக்டர் பூர்ணிமாவும் பணியாற்றினர். கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் கருணாகரன் ஓய்வு பெற்ற பின் பூர்ணிமா மட்டும் பணியாற்றி வந்தார்.


இந்நிலையில் பூர்ணிமாவும் பணி உயர்வில் தூத்துக்குடி துறைமுகத்துக்கு சென்றுவிட்டார். தற்போது ஒரே ஒரு மருத்துவர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றார். எபோலா நோய் பரவி வரும் சூழலில் கூட மத்திய சுகாதாரத்துறை மருத்துவர் பணியிடங்களை நிரப்பவில்லை எனவும், ஒப்பந்த மருத்துவரே உள்ளதால் எபோலா சோதனைகள் ஏதும் திருச்சி விமான நிலையத்தில் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.