உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியானார் பிரேமானந்தா சாமியாருக்கு தீர்ப்பு வழங்கிய நீதிபதி

Posted by Unknown on 9:00 AM with No comments

தமிழகத்திலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாக, முதல் பெண் நீதிபதி பானுமதி இன்று பதவியேற்கிறார். உச்ச நீதிமன்றத்தில் மொத்த நீதிபதிகள் ஒதுக்கீடு 31. தற்போது 27 நீதிபதிகள் உள்ளனர். இவர்களில் ஒரு நீதிபதி மட்டும் பெண் நீதிபதியாவார். தற்போது, உச்ச நீதிமன்றத்தில் 4 புதிய நீதிபதிகள் நியமிக்கப்படவுள்ளனர். இதற்கான ஒப்புதலை ஜனாதிபதி வழங்கியுள்ளார்.

 இதையடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக மூத்த வக்கீல் உதய் உமேஷ் லலித், மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பிரபுல்ல சந்த் பாண்டே, கவுகாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அபய் மனோகர் சபேரே, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.பானுமதி ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்க உள்ளனர்.

உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்கவுள்ள நீதிபதி ஆர்.பானுமதி தர்மபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்தவர்.  தனது 33வது வயதில் 1988ல் மாவட்ட நீதிபதியாக நேரடியாக தேர்வு செய்யப்பட்டார். திருச்சியில் நீதிபதியாக பணியாற்றியபோது நாட்டையே உலுக்கிய பிரேமானந்தா சாமியார் வழக்கை விசாரித்தார். அந்த வழக் கில் சாட்சி விசாரணை முடிவடைந்த நிலையில் பாலியல் பலாத்காரம் செய்த பிரிவுகளில் சாமியார் பிரேமானந்தாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியும் ரூ.67 லட்சம் அபராதம் விதித்தும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கி மிகவும் பிரபலமானவர்.

இவர் கடந்த 2003 ஏப்ரல் 3ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த 2013 நவம்பர் 12ல் ஜார்க்கண்ட் மாநில உயர் நீதிமன்ற தலை மை நீதிபதியாக பொறுப்பேற்றார். தற்போது, உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்கவுள்ள நீதிபதி பானுமதி தமிழகத்திலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்கும் முதல் தமிழ் பெண் என்ற பெருமையைப் பெறுகிறார். இவர் உச்ச நீதிமன்றத்தில் 7 ஆண்டுகள் நீதிபதியாக பணியாற்றவுள்ளார். உச்ச நீதிமன்ற வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் நீதிபதி பானுமதிக்கு இன்று காலை 10.30 மணிக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.