திருச்சி டாஸ்மாக் அதிகாரிகள், ஊழியர்கள் 61 பேர் இடைநீக்கம் விற்பனையில் முறைகேடு அதிரடி

Posted by Unknown on 10:11 AM with No comments
திருச்சி டாஸ்மாக் அதிகாரிகள், ஊழியர்கள் 61 பேர் இடைநீக்கம் விற்பனையில் முறைகேடு அதிரடி

திருச்சி மாவட்டத்திலுள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பனையில் முறைகேடு செய்த புகாரின் பேரில்  அதிகாரிகள், ஊழியர்கள் என 61 பேர் புதன்கிழமை தாற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்டத்திலுள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் அரசு நிர்ணயித்த விலையைக் காட்டிலும் கூடுதலாக தொகை பெற்று மது வகைகளை விற்பனை செய்வது போன்ற முறைகேடுகள் நிகழ்வதாக வந்த புகாரில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலிருந்து சோதனை நடத்த உத்தரவிடப்பட்டது. இதன்படி, டாஸ்மாக் துணை மேலாண் இயக்குநர் தலைமையிலான குழுவினர் மாவட்டத்திலுள்ள 230-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளில் கடந்த மார்ச்  26 முதல் 28-ம் தேதி வரை சோதனை நடத்தினர். இச்சோதனையின் போது சில கடைகளில் வசூலான தொகையைக் காட்டிலும் கூடுதலான தொகை இருந்தது, நிர்ணயித்த விலையைக் காட்டிலும் கூடுதலான விலையில் மது வகைகளை விற்பனை செய்தது போன்ற முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட கடைகளின் மேற்பார்வையாளர்களிடம் எழுத்துப்பூர்வமான கடிதமும் பெறப்பட்டது.

தொடர் விசாரணைக்குப் பின்னர் மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் 9 பேர், டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் உள்பட 61 பேரை தாற்காலிக இடைநீக்கம் செய்து டாஸ்மாக் நிர்வாகம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

நன்றி: தினமணி 8.7.14