இலங்கை தமிழர்கள் பற்றி மோடிக்கு கவலையில்லை: வைகோ ஆவேசம்
Posted by Unknown on 9:27 AM with No comments
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இலங்கை தமிழர்கள்
பற்றி மோடி கவலைப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் ஈவு இரக்கம் இன்றிப் படுகொலை செய்யப்பட்ட
அநீதியை மறைத்து, சிங்கள அரசுடன்
இந்திய அரசு வர்த்தக பொருளாதார உறவுப் பாலத்தை அமைக்கும் வேலைகள் வேகமாக
நடக்கின்றன.
இலங்கைக்கு வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் ஒரு நிதியையும் அறிவித்து,
அதில் தமிழர்களுக்கும்
உதவி கொடுக்கப்படும் என்ற மாய வேலைக்கும் ஏற்பாடு நடக்கிறது.
கடந்த 60 ஆண்டுகளில்,
சிங்கள அரசு, தமிழர்களோடு செய்துகொண்ட ஒப்பந்தங்கள் எதையும்
நிறைவேற்றியது கிடையாது, தமிழர்களை
வதைத்து அடிமை இருளில் நசுக்கியது.
சிங்கள அரசு ஒருக்காலும் தமிழ் இன விரோதப் போக்கை மாற்றிக் கொள்ளாது என்பதற்கு
நேற்று முன்தினம் கொழும்பில் நடைபெற்ற சம்பவமே எடுத்துக்காட்டு.
2008, 2009 ஆண்டுகளில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது
குறித்தும், ஏராளமானவர்கள்
சிங்கள ராணுவத்தால் கடத்தப்பட்டுக் காணாமல் போனது குறித்தும் ஐரோப்பிய நாடுகளுடன்
இணைந்து அமெரிக்கத் தூதரகம் கொழும்பில் ஏற்பாடு செய்து இருந்த துயர் களைய குறை
கேட்கும் நிகழ்ச்சியில், தங்கள் துன்பம்
தீர வழி பிறக்குமா? என்ற ஏக்கத்தில்
பாதிக்கப்பட்ட தமிழ் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
காணாமல் போனவர்கள் உயிரோடு இருக்கின்றார்களா? அல்லது வதை முகாமில் சித்திரைவதை
செய்யப்படுகிறார்களா? என்ற கவலை
மேலிட்டவர்களாக அவர்கள் தங்கள் துயரங்களை அக்கூட்டத்தில் பதிவு செய்ய
முற்படுகையில், புத்த
பிட்சுகளின் தலைமையில் வன்முறையாளர்கள் கூட்டத்தில் புகுந்து கலவரம் செய்து
உள்ளனர்.
மனிதாபிமானத்துடன் விசாரணை நடத்திய அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தூதரக
அதிகாரிகளை மிரட்டியுள்ளனர், இதனால் அந்தக்
கூட்டத்தை நடத்த முடியாமல் போனது.
இலங்கைத் தீவில் நடைபெற்ற தமிழ் இனப் படுகொலை குறித்தோ, தற்போது மனித உரிமைகள் நசுக்கப்படுவது குறித்தோ
இந்தியாவின் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கிஞ்சிற்றும் கவலைப்படுவதாகக்
காணோம்.
உலகத்தில் எத்தனையோ இனங்கள் அழிவுகளையும், அவலங்களையும் அடக்கு முறையாளர்களால்
அனுபவித்தபோதும், அதற்கெல்லாம்
உரிய நீதியை பல்வேறு கட்டங்களில் அனைத்துலக நாடுகளும், ஐ.நா. மன்றமும் வழங்கி வந்துள்ளன.
ஆனால், ஈழத் தமிழர்களைப்
பொறுத்தமட்டில் நாதியற்றுப் போனார்களா? நானிலத்தில் அவர்களுக்கு நீதியே கிடையாதா? என்ற கேள்விகள் விசுவரூபம் எடுக்கின்றன.
ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள அரசின் கொடுஞ்செயல்கள் குறித்து
விசாரணை செய்வதற்கு ஐ.நா. மன்றம் அமைத்த மூவர் குழுவினருக்கு இந்திய அரசு விசா
அனுமதி மறுத்தது மன்னிக்க முடியாத குற்றம் மட்டும் அல்ல, ஈழத் தமிழ் இனப்படுகொலைக்கு உடந்தையாகச்
செயல்படுகிற குற்றமும் ஆகும்.
புண்ணுக்குப் புனுகு பூசி விடலாம், லட்சக்கணக்கான தமிழர்கள் மண்ணுக்குள் புதைந்ததுபோல் நீதியும் புதைந்து
போகட்டும், காலம்
அனைத்தையும் மறக்கடித்து விடும் என்ற மனோநிலையில், இந்திய அரசின் போக்கு குறிப்பாக
வெளிவிவகாரத்துறை அமைச்சகத்தின் போக்கு அமைந்து இருக்கிறது.
மேலும், தாய்த்
தமிழகத்தில் உள்ள இளைஞர்களும், மாணவர்களும்,
உலகெங்கும் உள்ள
புலம்பெயர்வாழ் ஈழத் தமிழர்களும் தமிழ் இனப்படுகொலைக்கு காரணமானவர்களைக் கூண்டில்
நிறுத்தவும், இருளின் பிடியில்
தவிக்கும் ஈழத் தமிழர்களுக்கு நிம்மதியான விடியல் கிடைக்கவும் உறுதி கொள்வோம்
என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment