காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களை பாராட்டிய முதல்வர் ஜெயலலிதா

Posted by Unknown on 12:00 PM with No comments
காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ரூ.2.70 கோடி பரிசு தொகையை முதல்வர் ஜெயலலிதா வழங்கி வாழ்த்தினார்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பளுதூக்குதலில் தங்கப் பதக்கம் வென்ற வீரர் சதீஷ் சிவலிங்கம், ஸ்குவாஷ் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனைகள் தீபிகா பல்லிக்கல், ஜோஸ்னா சின்னப்பா ஆகியோருக்கு தலா 50 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளும், டேபிள் டென்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஷரத் கமல், அந்தோணி அமல்ராஜ் மற்றும் ஹாக்கியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ரூபிந்தர் பால் சிங், ஸ்ரீஜேஷ் ஆகியோருக்கு தலா 30 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளும் வழங்கப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வீரர்கள், தமிழக அரசின் ஊக்கத்தால் தொடர் வெற்றிகளைக் குவிப்போம் என நம்பிக்கை தெரிவித்தனர்.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் 23.7.2014 முதல் 3.8.2014 வரை நடைபெற்ற 20வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், பளுதூக்குதல் போட்டியில் 77 கிலோ உடல் எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றதோடு, புதிய சாதனையும் புரிந்த தமிழகத்தைச் சேர்ந்த எஸ்.சதீஷ்குமார்; ஸ்குவாஷ் மகளிர் இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த ஜோஷ்னா சின்னப்பா மற்றும் தீபிகா பல்லிகல் ஆகிய மூன்று வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு தலா 50 லட்சம் ரூபாய்க்கான உயரிய ஊக்கத் தொகை; மேசைப்பந்து (Table Tennis) ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த அச்சயதா ஷரத் கமல் மற்றும் அந்தோணி அமல்ராஜ்; ஆடவர் ஹாக்கி போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த தமிழகத்தைச் சேர்ந்த ரூபியதர் பால் சிங் மற்றும் ஸ்ரீஜேஷ் பரட்டு ரவீந்திரன் ஆகிய நான்கு வீரர்களுக்கு தலா 30 லட்சம் ரூபாய்க்கான உயரிய ஊக்கத் தொகை என மொத்தம் 2 கோடியே 70 லட்சம் ரூபாய்க்கான உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலைகளை 7 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில் வழங்கி பாராட்டினார்.

முதல்வரிடம் இருந்து ஊக்கத் தொகையினைப் பெற்றுக் கொண்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், தங்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் உயரிய ஊக்கத் தொகை வழங்கி பாராட்டியமைக்காக முதலமைச்சருக்கு நன்றியினை தெரிவித்துக் கொண்டனர். அப்போது, முதல்வர் ஜெயலலிதா, "Congratulations. நாங்கள் உங்கள் வெற்றியைக் கண்டு பெருமைப்படுகிறோம். இன்னும் நிறைய வெற்றியை நீங்கள் அடையவேண்டும் என வாழ்த்துகிறேன்.


I wish you many more victories in the future" என ஒவ்வொரு வீரர், வீராங்கனைகளையும் வாழ்த்தியதோடு மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் "Once again I offer my congratulations to all of you. You have brought glory and pride for the State of Tamilnadu and for the country and I wish you all greater and greater success"" என்று தெரிவித்தார்" எனக் கூறப்பட்டுள்ளது. 
Categories: