காவல்துறையில் காலியாக உள்ள 5,883 பணியிடங்களை நிரப்பப்படும் முதலமைச்சர் ஜெயலலிதா தகவல்
Posted by Unknown on 9:24 AM with No comments
காவல் துறையில் காலியாக உள்ள 5,883 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை
எடுக்கப்பட்டு வருவதாக சட்டசபையில் முதல்–அமைச்சர்
ஜெயலலிதா கூறினார்.
மானிய கோரிக்கை விவாதம்
சட்டசபையில் நேற்றைய கேள்வி நேரம் முடிந்ததும், காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம்
நடைபெற்றது. விவாதத்தில் உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா பதில் அளித்தார்.
மானிய கோரிக்கை மீதான விவாதத்தை தொடங்கிவைத்து தே.மு.தி.க. உறுப்பினர்
வி.சி.சந்திரகுமார் பேசினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:–
பணி சுமையை குறைக்க நடவடிக்கை
உறுப்பினர் சந்திரகுமார்:– போலீசாரின் ஓய்வு வயது 58 ஆக உள்ளது. அதை 60 ஆக
உயர்த்த வேண்டும். தேர்தலின்போது 3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரிந்த போலீசார்
பணி மாற்றம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு பழைய இடத்திற்கே பணி மாற்றம் வழங்க வேண்டும்.
முன்பு போலீசாரிடம் குறைகள் கேட்கும் வகையில் காவல் துறை முகாம்கள் நடத்தப்பட்டன.
மீண்டும் அதுபோன்ற முகாம்களை நடத்த வேண்டும்.
முதல்–அமைச்சர் ஜெயலலிதா:– காவல் துறையினருக்கு 8 மணி நேர பணி நிர்ணயிக்க வேண்டுமென்ற கோரிக்கை இங்கே
வைக்கப்பட்டது. காவல் பணி என்பது நேரம் வரையறுக்கப்பட்டு செய்யும் பணி அல்ல.
ரோந்து பணி, சட்டம்–ஒழுங்கு, நீதிமன்ற பணி மற்றும் முக்கிய நபர்களின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுபவர்கள்
சுழற்சி முறையில் பணி புரிந்து வருகின்றனர். காவலர்களின் பணி சுமையினை கருத்தில்
கொண்டு ஓய்வு வழங்கப்படுகிறது. மேலும், கூடுதல் நேர
ஊதியம், உணவுப்படி போன்ற சலுகைகளும் வழங்கப்படுகின்றன.
காவலர்களின் பணி சுமையைக் குறைக்க முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
உதவி ஆய்வாளர்கள் நியமனம்
உறுப்பினர் சந்திரகுமார்:– காவல் துறையில் உள்ள காலி பணியிடங்களையும்
உடனடியாக நிரப்ப வேண்டும். கடந்த 4 ஆண்டுகளாக உதவி ஆய்வாளர்கள் (சப்–இன்ஸ்பெக்டர்கள்) தேர்வு செய்யப்படவே இல்லை.
முதல்–அமைச்சர் ஜெயலலிதா:– தமிழ்நாடு காவல் துறையில், ஒவ்வொரு வருடமும் ஏற்படும் காலிப் பணியிடங்கள்
குறித்து முன்னதாகவே கணக்கெடுக்கப்பட்டு, அப்பணியிடங்களை
நிரப்புவதற்கான உத்தரவுகளை உரிய நேரத்தில் பெற்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர்
தேர்வாணையத்திற்கு அளிக்கப்பட்டு,
தேர்வாணையம் உரிய
அறிவிப்புகள் செய்து முறையாக தேர்வுகளை நடத்தி தகுதிவாய்ந்த நபர்களை
தேர்ந்தெடுத்து, காவல் துறையில் பல்வேறு பணியிடங்களுக்கு
பயிற்சிக்கு அனுப்பிவைக்கின்றனர்.
5883 காலி பணியிடங்கள்
இரண்டாம் நிலை காவலர் பதவிகளுக்கு 2012 மற்றும் 2013–ம் ஆண்டிற்கான காலிப்பணியிடங்கள் குறித்த தகவல்கள் மாவட்டங்களில் இருந்து
பெறப்பட்டு, 13,078 ஆயுதப்படை இரண்டாம் நிலைக் காவலர்கள்
மற்றும் 180 தமிழ்நாடு சிறப்புக் காவல் படை காவலர்களை தேர்ந்தெடுக்க தமிழ்நாடு
சீருடைப் பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இத்துடன், 886 உதவி ஆய்வாளர்கள், 277 தொழில்நுட்ப உதவி ஆய்வாளர்கள் மற்றும் 202 விரல்ரேகை பதிவு உதவி
ஆய்வாளர்கள் என மொத்தம் 1,365 உதவி ஆய்வாளர்களைத் தேர்ந்தெடுக்க தமிழ்நாடு
சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. ஆகவே, 4 ஆண்டுகளாக உதவி ஆய்வாளர்களை தேர்வு செய்ய எந்த நடவடிக்கையும்
எடுக்கப்படவில்லை என்பது தவறான கூற்று.
தற்போது, காவல் துறையில் பல்வேறு பதவிகளில் 20,506
காலிப் பணியிடங்கள் இருந்து வருகின்றன. இவற்றுள் 14,623 காலிப் பணியிடங்களைப்
பூர்த்தி செய்ய அரசு உத்தரவிட்டு,
அக்காலியிடங்களுக்கு
தகுதியான நபர்களைத் தேர்வு செய்ய தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம்
நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. மீதமுள்ள 5,883 காலிப் பணியிடங்களையும்
நிரப்புவதற்காக மாவட்டங்களில் இருந்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு அவற்றை நிரப்பத்
தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
போராட்டங்கள்
உறுப்பினர் சந்திரகுமார்:– 2012–ம் ஆண்டில்
தமிழகத்தில் 21,232 போராட்டங்கள் நடந்துள்ளன. அது இந்தியாவில் நடைபெற்ற மொத்த
போராட்டங்களில் 25 சதவீதம் ஆகும். நாள் ஒன்றுக்கு 60 போராட்டங்கள் வீதம்
தமிழகத்தில் நடைபெறுகிறது. அந்த அளவுக்கு தமிழக மக்கள் தினந்தோறும் பிரச்சினையை
எதிர்கொள்கிறார்கள்.
முதல்–அமைச்சர் ஜெயலலிதா:– தமிழ்நாட்டில் அமைதியான சூழ்நிலையில் நடக்கும் மக்கள் இயக்கப்
போராட்டங்களுக்கு காவல் துறையினர் அனுமதி மறுப்பதில்லை. அமைதியான போராட்டங்களை
கைவிட்டு, காலவரையற்ற உண்ணாவிரதம், சாலை மறியல், பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், நிர்வாகத்தினரை தொழிற்சாலைகளுக்குள் செல்லவிடாமல் தடுத்தல் போன்ற சட்டவிரோதச்
செயல்களில் ஈடுபட்டு அதனால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு பொது அமைதி சீர்குலைய
வாய்ப்பிருந்தால் மட்டுமே காவல்துறையினர் அதுபோன்ற நிகழ்வுகளுக்கு அனுமதி தர
உயரதிகாரிகளுடன் கலந்தாலோசித்து பின்னர் சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி
அளிக்கின்றனர். சட்டம்–ஒழுங்கு பராமரிப்பிற்கு நிச்சயமாக பங்கம்
ஏற்படும் என்று காவல் துறையினர் முடிவு செய்யும் சமயங்களில் மட்டுமே
போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
இவ்வாறு விவாதம் தொடர்ந்தது.
Categories: தமிழகம்
0 comments:
Post a Comment