ஸ்ரீரங்கம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளபோது துணை மேயர் பதவியேற்கலாமா? திடீர் சர்ச்சை

Posted by Unknown on 6:51 PM with No comments
திருச்சி மாநகராட்சி துணைமேயர் தேர்தல் நேற்று நடந்தது. அதிமுகவைச் சேர்ந்த அரியமங்கலம் கோட்டத்தலைவர் சீனிவாசன் மனு தாக்கல் செய்தார். வேறு யாரும் போட்டியிடாததால், அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது. துணை மேயர் வெற்றிச்சான்றிதழை மாநகராட்சி கமிஷனர் விஜயலட்சுமி வழங்க, சீனிவாசன் பெற்றுக்கொண்டார். பின்னர் சீனிவாசன் துணைமேயர் அலுவலகத்தை திறந்து உள்ளே சென்றார். இதில் அரசு தலைமை கொறடா மனோகரன், எம்.பி குமார், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஸ்ரீரங்கம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது, உள்ளாட்சி தேர்தல் நடத்தி அதற்கான அறிவிப்பு வெளியிட்டு, பதவியேற்ற விவகாரம் சர்ச்சையை கிளப்பி உள்ளது. தேர்தல் விதிமுறைப்படி, உள்ளாட்சி தேர்தல் நடத்தி அறிவிப்பு வெளியிட்டாலும், பதவியேற்கக்கூடாது என தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறிப்பிடுகின்றன.
ஒரு தேர்தல் நடக்க உள்ள நிலையில், நடந்து முடிந்த தேர்தலுக்கு அறிவிப்பு வெளியிடக்கூடாது. பதவியேற்பு நிகழ்ச்சி நடத்தவே கூடாது. தேர்தல் ஆணையம் நடத்தை விதிமுறைப்படி, மற்றொரு தேர்தல் நடக்க உள்ள நிலையில், நடந்து முடிந்த தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டு, அதுதொடர்பான தகவல்கள் வெளியானாலேயே அக்கட்சிக்கு சாதகமாக மக்கள் மனநிலை மாறும் என்பதே அடிப்படை சாராம்சம்.
மாநகராட்சி கமிஷனர் விஜயலட்சுமியிடம் கேட்டபோது, துணைமேயருக்கான பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதற்கும் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்கும் தொடர்பு இல்லை. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டுவிட்டோம். அதன்பிறகு தான் இந்நிகழ்ச்சியை நடத்தினோம். இது நேரடியாக மக்கள் வாக்களிக்கும் தேர்தல் அல்ல. மறைமுக தேர்தல் தான் என்றார்.
பெயர் வெளியிட விரும்பாத ஓய்வுபெற்ற தேர்தல் அதிகாரி கூறுகையில், நான் திருச்சி மாவட்டத்தில் தேர்தல் அதிகாரியாக பணியாற்றியபோது, பல்கலைக்கழகத்தில் செனட் உறுப்பினர்களுக்கான தேர்தல் நடத்த அனுமதி கோரி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தினர் வந்தனர். அதற்கு நாங்கள் அனுமதி தரவில்லை. ஏனெனில் அரசியல் கட்சியினர் தங்கள் செல்வாக்கை நிரூபிக்க அது வாய்ப்பாக அமைந்துவிடும் என்பதால் அதற்கு அனுமதிக்கவில்லை. துணைமேயர் தேர்தல் நடத்தி, அறிவிப்பு வெளியிட்டு, பதவியேற்றிருக்கக்கூடாது. மறைமுக தேர்தலாகவே இருந்தாலும் அது ஒரு வகையில் வெற்றி பெற்ற வேட்பாளர் சார்ந்த கட்சிக்கு சாதகமாகவே அது அமையும். இது இடைத்தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது என்றார்.
பூட்டியிருந்த துணை மேயர் அறையை திறந்து உள்ளே சென்ற சீனிவாசனுக்கு சால்வை அணிவித்து அரசு கொறடா மனோகரன், எம்பி குமார், எம்எல்ஏ பரஞ்சோதி, மேயர் ஜெயா ஆகியோர் வாழ்த்து தெரிவிக்கின்றனர்.