என் மகள் சங்கீதா மரணத்துக்கு நித்யானந்தா–ரஞ்சிதாவே காரணம்... சங்கீதாவின் தயார் ஜான்சி

Posted by Unknown on 5:43 AM with No comments

என் மகள் மரணத்துக்கு நித்யானந்தா–ரஞ்சிதாவே காரணம்: திருச்சி பெண் புகார்


நித்யானந்தா சாமியார் மீது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பாலியல் புகார் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமம் மீதும் பல்வேறு புகார்கள் எழுந்தன. நித்யானந்தாவுடன், நடிகை ரஞ்சிதா ஒன்றாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகளும் வெளியானது. இதையடுத்து நித்யானந்தாவுக்கு எதிராக கர்நாடக மற்றும் தமிழகத்தில் போராட்டங்களும் நடைபெற்றன.


சமீபகாலமாக நித்யானந்தா தொடர்பாக எந்தவிதமான புதிய சர்ச்சைகளும் கிளம்பாமல் இருந்தது. இந்நிலையில் பிடதி ஆசிரமத்தில் தங்கி இருந்த திருச்சியை சேர்ந்த இளம்பெண் சங்கீதா மர்மமான முறையில் மரணம் அடைந்திருக்கும் சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருச்சி ராம்ஜி நகர் நவலூரை சேர்ந்த  உடையார் சமூகத்தை சேர்ந்த அர்ஜூனன்–ஜான்சிராணி ஆகியோரது மகள் சங்கீதா நித்யானந்தா ஆசிரமத்தில் நீண்ட நாட்களாக பணிபுரிந்து வந்தார். கடந்த மாதம் 28–ந் தேதி பெங்களூர் ஆசிரமத்தில் அவர் மரணம் அடைந்தார். இது தொடர்பாக சங்கீதாவின் தாய் ஜான்சிராணி, நித்யானந்தா மீதும், நடிகை ரஞ்சிதா மீதும் பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார். அதன் விவரம் வருமாறு:–

எனக்கு 3 மகள்கள். 3–வதாக பிறந்தவள்தான் சங்கீதா. மகள்களில் ஒருவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திடீரென மரணம் அடைந்து விட்டார். சகோதரியின் இறப்புக்கு பின்னர் சங்கீதா மிகவும் மனம் உடைந்து காணப்பட்டார். இதனால், மன அமைதிக்காக பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்துக்கு சென்றாள். 2004–ம் ஆண்டு முதல் அங்கு பணி புரிந்து வரும் சங்கீதாவுக்கு வெளி நாடுகளில் இருந்து வரும் பணத்தை கண் ணிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. இத்தனை ஆண்டுகளிலும் எந்தவித குற்றச்சாட்டும் அவள் மீது எழவில்லை.

10 நாட்களுக்கு முன்னர், லேப்டாப் மற்றும் பொருட்களை திருடி விட்டதாக சங்கீதா மீது குற்றம் சுமத்தியுள்ளனர். கடந்த 28–ந் தேதி அன்று நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்து போன் செய்து சங்கீதா இறந்து விட்டாள் என்று தெரிவித்தனர். அவள் மீது திருட்டு பட்டம் சுமத்தியதுடன், இருதய கோளாறு காரணமாகவே இறந்து விட்டாள் என்றும் கூறினர். எனது மகளின் சாவில் மர்மம் இருக்கிறது. அவளது மூக்கு மற்றும் வாயில் இருந்து ரத்தம் கொட்டி இருக்கிறது. எந்த நோயும் இல்லாமல் இருந்த சங்கீதா இருதய நோயால் இறந்து விட்டாள் என்று கூறுவதை நம்ப முடியவில்லை.

பிடதி ஆசிரமத்தில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த சங்கீதா கடந்த ஓராண்டாக சரியாக என்னால் வேலை செய்ய முடியவில்லை என்று கூறி வந்தார். சில நாட்களுக்கு முன் திருச்சிக்கு வந்திருந்த சங்கீதாவை ஆசிரமத்தில் இருந்து வந்திருந்த நித்யானந்தாவின் சீடர் ஹம்சானந்தா மற்றும் சிலர் தாக்கினர். மீண்டும் ஆசிரமத்துக்கு செல்ல மனமில்லாமல் இருந்த சங்கீதாவை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று விட்டனர். ஆசிரமத்தில் இருந்து பென்டிரைவ், லேப்–டாப் ஆகியவற்றை திருடி விட்டதாக குற்றம் சுமத்திய அவர்கள் அது தொடர்பாக விசாரிக்க வேண்டியுள்ளது என்றும் கூறினர்.

கடந்த 6 மாத காலமாக எங்கள் குடும்பத்தினர் யாரையும் சங்கீதாவுடன் பேசுவதற்கு ஆசிரமத்தில் இருப்பவர்கள் அனுமதிக்கவில்லை. சமீபத்தில் நித்யானந்தாவை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது, அவர் பென் டிரைவ், லேப்–டாப்பை திருடிய சங்கீதா, அதில் இருக்கும் வீடியோக்களை வைத்து என்னை மிரட்ட முயற்சிக்கிறார். யாராலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று சவால் விடுத்தார்.


பிரேத பரிசோதனை கூடத்தில் சங்கீதாவின் உடலை எங்களிடம் சரியாக காட்டவில்லை. மர்மமான முறையில் ஒருவர் இறக்கும் போது, பிரேத பரிசோதனைக்கு முன்னர் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் சங்கீதா விஷயத்தில் பின்பற்றப்படவில்லை. நித்யானந்தாவின் சீடர்களே கையெழுத்து போட்டுள்ளனர். எனது மகளின் சாவுக்கு நித்யானந்தா, நடிகை ரஞ்சிதா மற்றும் நித்யானந்தாவின் சீடரான சம்சானந்தா ஆகியோரே காரணம்.

எனவே சி.பி.சி.ஐ.டி. போன்ற தனி அமைப்புகள் மூலம் விசாரணை நடத்த வேண்டும். எனது மகளின் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். அப்போதுதான் உண்மைகள் வெளிவரும். நியாயம் கிடைக்கும்.

இவ்வாறு சங்கீதாவின் தாய் ஜான்சிராணி கூறினார்.